Friday, 10 May 2019

மனதிற்கு ஒரு மனு..!..

மகிழ்வித்து மகிழ்ந்து
வாழ் மனமே - நிலம்
அகழ்ந்தெம்மை புதைப்போர்
சிந்தும் கண்ணீர் தான்
நம் வாழ்வை
அர்த்தமாக்கும் மனமே

சூழ்ச்சி செய்து ஆள்வதற்கு
வாழ்க்கை நிரந்தரமோ மனமே
எழுச்சி என்று கோசமிட்டும்
தொலைத்தலைந்தே நிம்மதியை
எதையெடுத்து சென்றிடுவோம்
உயிர் பிரிந்த பின்னே

உயர்ந்தோர்
தாழ்ந்தோர் என்றெல்லாம்
வாழ்ந்தோர் வகுத்ததுவே மனமே
பூமியின் தோற்றத்தோடு
தோன்றவில்லை
இனம் என்ற பொருளே!

இன்னும் எத்தனைதான்
பிரிவினைகள் மண்ணின் மேலே
உதித்த உயிர்க்கெல்லாம்
உணர்விருக்கு உணர்ந்திடு நீ மனமே

புகழ்ச்சியென்றும்
இகழ்ச்சியென்றும்
அகத்தினுள்ளே அழுக்கு சேர்த்து
இழிவான செயல் புரிந்து
அழிந்து போவதுவோ மனிதம்

பிரித்தல் அறிவு தான்
ஆறாம் அறிவென்றால்
நாம் அஃறிணையில்
இணைந்து கொண்டு
பண்புடனே வாழ்ந்திடலாம்
அன்பெடுத்து வா!

விலங்கினம் வேட்டை செய்யும்
உணவொன்று இல்லாது
உயிர் இறக்க நேருவதால் தானே,
கோட்டையில் தான் வாழ
வேட்டை செய்யும் மனித இனம்
விலங்கை விட உயர்ந்தில்லை
விளங்கி நீ விரைந்து வா மனமே!

சுயநலத்தில் சூழ்ச்சி செய்து
அயலவரை அழித்து விட்டு
சுடுகாட்டை
ஆள்வதை விட மனமே!

அடுத்த உயிர்க்கொரு
தீங்கும் நினைக்காமல்
எடுத்து உண்டாலும் பிச்சை
ஒரு இழிவும் உணக்கில்லை மனமே..!..
            ---மனதிற்கு ஒரு மனு!----

No comments:

Post a Comment