கொழுந்து கூடை சுமந்து கொண்டு
கழுத்தை வளைத்த படி
நடந்தவள் தான் - நாட்டின் தலையெழுத்தை மாற்றியவள்
பெயரெழுத தெரியாதவள்
பெயர் போற்றும் நாடு செய்தாள்
உயரத்தில் இருந்தும் கூட
துயரங்கள் பல கெண்டிருப்பாள்
காட்டிலுள்ள அட்டையெல்லாம்
குருதியை உறிஞ்சு விட
குளவியும் தேனீயும்
கொட்டிய துன்பம் பல
குடும்பத்திற்காய் மறந்துவிட்டு
வேலை செய்ய புறப்படுவாள்
பரிதி வந்து உச்சம் காட்ட
வருத்திடும் வெயிலிலும்
கருத்தாய் கொழுந்தெடுப்பாள்
மழையில் நனைந்தபடி
மழலை வாழ்வை மாற்ற வேண்டி
வெறுப்பின்றி வேலை செய்வாள்
பருத்தி விரர் போல்
பல பேர் வேலை பார்த்து
வருத்திடும் வார்த்தைகளால்
துரத்திய நாட்களிலே
மனம் வருந்தி மனை வருவாள்
இடறிய கற்களை
இடது காலால் தள்ளிவிட்டு
அடவி கொண்ட முட்கள் குத்த
சத்தமின்றி எடுத்தெரிந்து
அடுத்த அடியை எடுத்து வைப்பாள்
எடுத்த தேயிலையும்
அடுத்த தேசம் போயிரிச்சி
கொடுத்த இவள் தடமோ
இன்றளவும் மாறலியே
வெள்ளயர்கள் நட்ட பயிர்
ஆண்டு பல தள்ளி போச்சி
வேண்டி நின்றோர் வெறுப்பு காட்ட
பாண்டியத்தியம் வெளுத்துரிச்சி
இருக்கிற பாதுகாக்க
எவருக்குமே இயளவில்ல
பறக்குறத புடிக்கிறோம்னு
கருத்தாடல் நடக்குதிங்கே
கறுத்து போன கைகளுக்கு
அறுப்புக்கேற்ற ஊதியத்தை
மறுப்பவரும் மானுடர்தான்
குடித்த தேநீர்
உதிரமென மறந்துவிட்டு
தடித்த வார்த்தைகளால்
தர மறுப்பர் உரிமைகளை
எப்படியும் மாறிவிடும்
எம் நிலைமை என்றெண்ணி
இப்படியே வாழ்ந்து விட்டு
மடிந்தவர்கள் எத்தனையோ!
அத்தனையும் நடந்தேற
அடுத்த தலைமுறையின்
தலையெழுத்தை மாற்ற எண்ணி
எடுத்தடி வைக்கிறாள்
எத்துணையும் இல்லாமல்....
-------------மலைத்தாய்--------------

No comments:
Post a Comment